சென்னை: இயக்குனர் சுசி கணேசன் தனக்கு எதிராக டிவிட்டரில் ‘மீ டு’ புகார் தெரிவித்தது தொடர்பாக லீனா மணிமேகலைக்கு எதிராக சில ஆண்டுகளுக்கு முன் சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், மனுதாரரின் குற்றச்சாட்டில் முகாந்திரம் இருப்பதாக கூறி சுசி கணேசனுக்கு எதிராக ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை வெளியிட லீனா மணிமேகலை மற்றும் சின்மயி ஆகியோருக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டிருந்தது. இந்த வழக்கு நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, சுசி கணேசன் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ஆஜரானார். அப்போது குறுக்கிட்ட நீதிபதி, உயர் நீதிமன்றம் உத்தரவிட்ட பிறகும் ஏன் தொடர்ந்து பத்திரிகைகளில் கருத்துகளை வெளியிட்டு வருகின்றனர். உயர் நீதிமன்ற உத்தரவை மதிக்க வேண்டும் என்று லீனா மணிமேகலைக்கு அவரது வழக்கறிஞர் அறிவுறுத்த வேண்டும். இந்த வழக்கில் லீனா மணிமேகலை பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என்றும் உத்தரவிட்டு விசாரணையை வரும் 21ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.